நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திறந்த மனதுடன் விவாதங்களை நடத்த வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன. கூட்டத்தின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.
இந்த கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“இந்த காலக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர திருவிழாவை கொண்டாடும் காலம் இது. இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த நாள். அடுத்த 25 ஆண்டுகளின் நூற்றாண்டு சுதந்திர விழாவை கொண்டாடவுள்ளோம். நமது பயணத்தையும், நமது உயரத்தையும் நிர்ணயம் செய்து தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் இது.
நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி.க்களும் திறந்த மனதுடன் பேச வேண்டும். தேவைப்பட்டால் விவாதங்கள் நடத்த வேண்டும். அனைத்து எம்.பி.க்களும் சிந்தித்து விவாதங்களை மேற்கொண்டு அமர்வை முடிந்தவரை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.
மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இந்த அமர்வில் நடைபெற்று வருவதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த காலகட்டத்தில் புதிய குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் நம் தேசத்தை வழிநடத்தத் தொடங்குவார்கள்.”
இந்த கூட்டத்தொடரின் இறுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் இந்த தொடரிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்வார்கள்.