தலைநகர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வெளியே அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தில்லியில் 30 வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு தகுந்த விளக்கம் அளிக்குமாறு சுகாதார அமைச்சகம் மருத்துவமனையிடம் அறிக்கை கோரியுள்ளது.
திங்கள்கிழமை மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், இரவு முழுவதும் மருத்துவமனைக்கு வெளியே இருந்ததாகவும், சேலையை மறைத்து பிரசவம் பார்த்ததாகவும் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாம்| பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்தியது மலேசியா!
இதுகுறித்து துணை ஆணையர் சி.மனோஜ் கூறுகையில்,
காசியாபாத்தின் கேராவில் வசிக்கும் பெண், குழந்தை பிறக்கவிருந்த நேரத்தில் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பிரசவ வலி தாங்கமுடியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே அவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது அந்த பெண்ணும் அவரது குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் நலமாக உள்ளனர். மகப்பேறு மருத்துவப் பிரிவில் உள்ள மூத்த மருத்துவரின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
இதுதொடர்பாக மருத்துவமனைக்கு எதிராக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தில்லி மகளிர் ஆணையமும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜூலை 25-க்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையைக் கோரி உள்ளது.