நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இரு அவைகளிலும் விலை உயர்வை விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பதாகைகளை ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மக்களவை இன்று காலை கூடியவுடன், எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், காலை 11.45 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
அதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.