மாநிலங்களவை, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 3-ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் அமளியில் ஈடுபட்டதாகக்
கூறி 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்களது இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலங்களவையில் இருந்து 23 எம்.பி.க்களும் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் 50 மணிநேர தொடா் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி சிலை அருகே திறந்தவெளியில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் வியாழக்கிழமை கனமழை பெய்த நிலையில், தற்காலிக கூடாரம் அமைக்க அனுமதி வழங்கப்படாததால், நாடாளுமன்ற பிரதான வாயிலுக்கு போராட்டக் களத்தை மாற்றினா்.
இந்நிலையில் இன்று பகலில் காந்தி சிலை முன்பாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.