மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி விலக வேண்டும் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மாநிலத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் பகத் சிங் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், மேலும் அவர் தனது ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் 'தேன்மொழி' பாடல் வெளியீடு
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியதாவது: “ மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் பேச்சினை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுநர் அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும். ஆளுநருக்கு மகாராஷ்டிரத்தின் வரலாறு கூட தெரியாது. மகாராஷ்டிரம் திருபாய் அம்பானி என்ற மிகப் பெரிய தொழிலதிபரை உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் மற்ற மாநிலங்களின் மக்கள் மதிப்புடன் நடத்தப்படுகிறார்கள். அதனால் ஆளுநர் பொது நிகழ்வில் இவ்வாறு பேசி இருப்பது கண்டிக்கப்பட வேண்டியது. அதனால், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.” என்றார்.
இதையும் படிக்க: காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
முன்னதாக, நேற்று (ஜூலை 29) மகாராஷ்டிரத்தின் அந்தேரி பகுதியில் பொது நிகழ்வு ஒன்றில் ஆளுநர் பகத் சிங் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பேசியதாவது: “ சில நேரங்களில் நான் மகாராஷ்டிர மக்களிடம் ஒன்று சொல்வதுண்டு. மகாராஷ்டிரத்தில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மக்கள் இல்லாவிட்டால் உங்களிடம் பணம் இருக்காது என்பது தான் அது. அப்படி செய்தால் மகாராஷ்டிரம் இந்தியாவின் நிதித் தலைநகர் என அழைக்கப்படாது.” என்றார்.
இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் நந்திதா வெற்றி
ஆளுநரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது. ஆளுநர் பேசியது மகாராஷ்டிர மாநில மக்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமாக இருப்பதாக பலரும் தங்களது கடும் கண்டத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ஆளுநர் தனது இந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், மேலும் அவர் தனது ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.