பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை கையாளும் விதத்தை அரசினை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஜாஃபர் இஸ்லாம், மத்திய அரசினை விமர்சிப்பவர்கள் கூட அரசின் பொருளாதாரக் கொள்கைகளை பாராட்டி வருகின்றனர் என தெரிவித்தார்.
அண்மையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதாரம் சீராக உள்ளது எனக் கூறியதைத் தொடர்ந்து பாஜக செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாவது: “ இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நிலை இந்தியாவில் கிடையாது. இந்தியாவிடம் போதுமான அளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. அதேபோல வெளிநாட்டுக் கடன்களும் இந்தியாவிற்கு குறைவாகவே உள்ளது.” என்றார்.
இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: காமன்வெல்த்: இந்தியா இன்று விளையாடும் ஆட்டங்கள் எவை?
இந்தியப் பொருளாதாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஜாஃபர் இஸ்லாம் கூறியதாவது: “ இந்தியப் பொருளாதாரம் சீராக உள்ளது என்பதை உலக நாடுகள் அறியும். அதேபோல இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகில் பல நாடுகள் பணவீக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்களை விமர்சித்தவர்கள் தற்போது பாராட்டத் தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அடிக்கடி விமர்சிப்பார். ஆனால், அவர் இன்று இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் சரியாக உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.” என்றார்.