'அக்னிபத்' திட்டம் இந்தியாவின் தேசிய நலன்களுக்கு கேடு விளைவிக்கும் என்றும் இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பலர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, 'ஓய்வூதிய பணத்தை சேமிப்பதற்காக நம் ஆயுதப்படைகளின் தரம் மற்றும் செயல்திறனைக் குறைக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பு இல்லை, மேலும் தற்போது இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு வேலைவாய்ப்பு இருக்காது.
அதுமட்டுமின்றி ஒரு வீரரை தயார்படுத்தி ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்குகிறார். தனியார் போராளிகளுக்கும் அவர்கள் சேவை செய்வார்கள். ஏற்கனவே கடுமையான அழுத்தத்தில் உள்ள நமது சமூகக் கட்டமைப்பிற்கு அபாயகரமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. வேலை உத்தரவாதமின்றி அவர்களை நாட்டுக்குச் சேவையாற்ற அழைப்பது குற்றமாகும்' என்று கூறியுள்ளார்.
அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், 'வேலை தேடுவது என்பது மோடியின் ஆட்சியில் 'நெருப்புப் பாதை' போல ஆகிவிட்டது.
தற்போது அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி தரப்படவில்லை. பயிற்சி பெற்ற பிறகு 4 ஆண்டு கால பணிக்குப் பிறகு அவர்கள் வேலைவாய்ப்பு பெற சிரமப்படுவார்கள். மேலும் பயிற்சி அளித்து வீரர்களை விடுவிப்பது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும்.
எனவே, 'அக்னிபத்' திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உள்ள காலிப் பணியிடங்களை பழைய நடைமுறைகளைப் பின்பற்றி நிரப்ப வேண்டும்' என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் தீவிரமடையும் ‘அக்னிபத்’ போராட்டம்!