‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானில் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% பேர் வரையில் மட்டுமே நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பலர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பிகாரில் நேற்று தொடங்கிய போராட்டம் இன்று வன்முறையாக வெடித்துள்ளது. டயர்களை கொளுத்தியும் பேருந்துகளை அடித்து உடைத்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதுபோல, ராஜஸ்தானில் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியினர் மற்றும் தேர்வர்கள் இணைந்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். ராஜஸ்தானின் ஜோத்பூர், சிகார், ஜெய்ப்பூர், நாகூர், அஜ்மீர் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்.எல்.பி. கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஹரியாணா மாநிலம் குருகிராம், ரிவாரி, பல்வால் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்ததாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷாஹர் மற்றும் பல்லியா மாவட்டங்களில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களிலும் போராட்டம் வலுத்து வருகிறது.
‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ‘அக்னிபத்’ திட்டத்தின் முழு விவரம்: யாருக்குப் பயன்?