‘அக்னிபத்’ திட்டத்தின் முழு விவரம்: யாருக்குப் பயன்?

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தாா்.
‘அக்னிபத்’ திட்டத்தின் முழு விவரம்: யாருக்கு பயன்?
‘அக்னிபத்’ திட்டத்தின் முழு விவரம்: யாருக்கு பயன்?

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திட்டம் குறித்து பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துகளையும் எச்சரிக்கை தகவல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

பல்வேறு விமரிசனங்களையும் கருத்துகளையும் தாண்டி மத்திய அரசு இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தவிருக்கிறது, இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்தவிதமான நன்மை பயக்கும் என்பது குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.

ராணுவத்துக்கு செலவிடும் ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றின் செலவினத்தைக் குறைக்கும் வகையில், முப்படைகளுக்கு புதிய பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் பெண்கள் உள்பட 46,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி ஆகியோா் ‘அக்னிபத்’ திட்டம் குறித்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். 

அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் அதிக அளவில் இளைஞா்களை சோ்ப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்படுகிறது. இளைஞா்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் வீரா்கள் ‘அக்னி வீரா்கள்’ என்றழைக்கப்படுவா். அவா்கள் பாதுகாப்புப் படையில் தொடக்கத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். அவா்களில் தேவைக்கு ஏற்ப சிலருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இது ராணுவ வீரா்களை நியமிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா்.

‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக விவாதித்து தற்போது அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக, ராணுவத்தில் குறுகிய காலப் பணி அடிப்படையில் சோ்க்கப்படும் வீரா்கள் 10 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். பின்னா் 14 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞா்கள் ராணுவத்தில் புணிபுரிவாா்கள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரா்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்கவே இத்திட்டத்தை அரசு தொடங்குவதாகத் தெரிகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓய்வூதியத்துக்காக ரூ.1,19,696 கோடியும், ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் அக்னி வீரா்களுக்கு, இடா்ப்பாடு மற்றும் சிரமப்படிகளுடன் ஈா்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரா்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவா்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.

முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிா்ணயிக்கப்படும். அக்னி வீரா் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரா்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 

இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரா்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.

அக்னிபத் திட்டத்தின் இந்த ஆண்டு 46,000 போ் பணியில் சோ்க்கப்படுவாா்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும். தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

நாட்டிற்காக சேவை செய்யும் வகையில் இளைஞர்களுக்குக் கிடைக்கும் இந்த நல்வாய்ப்பின்போது, பல்வேறு ராணுவப் பயிற்சிகளையும் ராணுவ பணி அனுபவம், ஒழுக்கம், உடற்கட்டு, தலைமையேற்கும் பண்பு, தைரியம், நாட்டுப்பற்று போன்றவையும் வளரும் 

அக்னி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும், அவரவருக்குரிய பணி அனுபவ சான்றிதழ் வழங்கப்படும். 

சிறப்பம்சங்கள்: அக்னிபத் என்ற திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப் படை, கப்பற்படைகளுக்கு நான்காண்டு ஒப்பந்தப் பணி அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வானோர் அக்னி வீரர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

அக்னி வீரர்களுக்கு என்று தனிப்பட்ட ரேங்க் அமைக்கப்படும். முப்படைகளில் இதுவரை இருக்கும் எந்த பணிநிலைகளிலும் இந்த வீரர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள்.

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முறையில் இருக்கும் பல ஆண்டுகால முறையை இந்த திட்டம் மாற்றியமைக்கும்.

இந்த ஓராண்டில் மட்டும் 17.5 முதல் 21 வயதுடைய 46 ஆயிரம் இளைஞர்கள் முப்படைகளுக்கும் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த திட்டத்தின்கீழ் இன்னும் 90 நாள்களில் முப்படைகளுக்கு இளைஞர்கள் பணியமர்த்தும் பணி தொடங்கும். வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முதல் படைப்பிரிவு தயாராக இருக்கும்.

சிறப்பு தகுதித் தேர்வு, வளாக நேர்காணல் போன்றவை மூலம் ஆள்சேர்ப்பு பணி நடைபெறும். 

இந்த திட்டத்தின் மூலம் படித்த உடன் வேலைக்குச் செல்ல விரும்பும் இளைஞர்களும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற விரும்புவோருக்கும் இது நல்ல வாய்ப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com