சென்னை, ஜூலை: 26 - குடகு பகுதியில் நல்ல மழை பெய்திருப்பதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் விடும்படி கோரி, கர்நாடக மாநில அரசுடன் தமிழக அரசு தொடர்பு கொண்டுள்ளது. இதுசம்பந்தமாக கர்நாடக மாநில அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
குடகில் பெய்யும் கனமழையைத் தொடர்ந்து கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 20 முதல் 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து சேருகிறது. ஆனால் மேட்டூர் நீர்த்தேக்கத்திற்குக் கடந்த 24 மணி நேரத்தில் தண்ணீர் வரத்து இல்லை.
இதற்கிடையில் பாசனத்திற்கு சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து தண்ணீர் விடப்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் நீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. திறந்து விடுவதற்கு முன்பு சனிக்கிழமையன்று மேட்டூரில் நீர் மட்டம் அறுபத்திரெண்டரை அடி. இன்று அறுபதரை அடி. பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்ட ஒன்றரை நாளில் மேட்டுர் நீர்த் தேக்கத்தில் தண்ணீர் மட்டம் இரண்டு அடி குறைந்துள்ளது.
குடகுப் பகுதியில் கனமழை பெய்துள்ளதைத் தொடர்ந்து கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தில் நல்ல நீர் வரத்து உள்ளதைச் சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டின் நிலைமையைக் குறிப்பிட்டும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆறு ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் விடும்படியும் கோரி கர்நாடக மாநில அரசுடன் தமிழக அரசு தொடர்பு கொண்டுள்ளது.
கன மழை காரணமாக மாநில மின் உற்பத்தி அதிகரித்து அங்கு அமல் செய்யப்பட்டிருந்த மின்வெட்டு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து உபரி மின்சாரம் பெறுவதற்கான முயற்சிகளைத் தமிழக மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
யு.எஸ். செயற்கை கோள் கோளாறு நீங்கியது - மண் வாரும் யந்திரக்கை மீண்டும் செயல்படுகிறது
பாசடேனோ (அமெரிக்கா). ஜூலை 26 - செவ்வாய் கிரகத்தில் இறங்கியுள்ள அமெரிக்க செயற்கைக் கோளான "வைகங் லாண்டரின்" மண் வாரும் யந்திரக் கையை மடக்க முடியாமல் ஏற்பட்டிருந்த கோளாறு தீர்ந்து விட்டது.
பாசடேனாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் யந்திரக் கையை புதன்கிழமை யன்று சிக்கலிலிருந்து விடுவித்தார்கள்.
அமெரிக்க செயற்கை கோள் சென்ற செவ்வாய்க்கிழமை யன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கியது தெரிந்ததே.
அந்த செயற்கை கோளின் ஒரு புறத்தில் யந்திரக்கை ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் பரப்பிலிருந்து மண்ணைத் தனியாக வாரி செயற்கைக் கோளில் போடுவதற்காக அந்த யந்திரக்கை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற உறுப்புக்களைப் போல அதுவும் தானாக இயங்கக்கூடியது ஆகும். சென்ற வியாழக்கிழமை யன்று அந்த யந்திரக் கையில் கோளாறு ஏற்பட்டது. அது இயங்கவில்லை. வைகிங் லாண்டர் கலத்திலிருந்து வெளியே நீளவும் பின்னர் மடங்கவும் அதனால் இயங்கவில்லை. அந்த யந்திரக் கை சுமார் மூன்று மீட்டர் நீளம் வெளியே நீண்டு, செவ்வாய் பரப்பு மண்ணை வாரிக் கொண்டு, பின்னர் மடங்கி, கலத்தில் உள்ள உயிரின ஆய்வுக்கூட மொன்றில் அந்த மண்ணைப் போட வேண்டும்.
வியாழக்கிழமை யன்று இரவு அந்த யந்திரக் கை வெளியே நீண்டு, அதன் முனையிலுள்ள ஒரு உலோக மூடியை உதறியது. பின்னர் அது மடங்கிக் கொள்ளாமல் அப்படியே சிக்கிக் கொண்டு நின்று விட்டது. ...
Summary
27.7.1976: Tamil Nadu Government writes to Karnataka requesting the release of water.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










