மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் இளைஞர்களை வேலை வாய்ப்பற்றவர்களாக்கிவிடும் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையிலான மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் ரயில்களை மறித்து இத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | அக்னிபத்துக்கு எதிராக இப்படிப் போராடுங்கள்: வருண் காந்தி யோசனை
இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் இளைஞர்களை வேலைவாய்ப்பற்றவர்களாக்கி விடும் என கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “மத்திய அரசின் அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். உடனடியாக மத்திய அரசு இந்தத் திட்டத்தை நிறுத்துவதோடு பழைய முறைப்படியே ராணுவ ஆள்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | 'அக்னிபத்' எதிரொலி: ஹரியாணாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு
“அக்னிபத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் எப்படி முழுமையான ஈடுபாட்டோடு பணி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ள சித்தராமையா நமது ராணுவ வீரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாத அளவு பாஜக அரசு திவாலாகி விட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.