
புது தில்லி: ஹரியாணாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிகார், உத்தர பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: அக்னிபத்துக்கு எதிராக இப்படிப் போராடுங்கள்: வருண் காந்தி யோசனை
முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக நடந்த போராட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200 ரயில்களின் சேவை இன்று பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்து எதிராக இளைஞர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்த, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆளும் பாஜக தரப்பினர் திட்டத்துக்கு ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. ஹரியாணாவின் சில பகுதிகளில் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத்துக்கு எதிரான போராட்டத்தால் தில்லி ஐடிஐ மெட்ரோ நிலையம் மூடப்பட்டது.