இளைஞர்கள் பொய்யான தேசியவாதிகளை அடையாளம் காண வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட வேண்டும். அமைதியாக போராடும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைதி வழியில் போராடும் இளைஞர்களுக்காக இந்த சர்ச்சைக்குரிய அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து ஜந்தர் மந்தரில் அகிம்சை வழியில் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராடும் இளைஞர்கள் குறித்து கூறியதாவது: “ உங்களைக் காட்டிலும் இந்த நாட்டுப்பற்று உடையவர்கள் யாருமில்லை. நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் உங்களுடைய கண்களைத் திறந்து பொய்யான தேசியவாதிகள் மற்றும் பொய்யான நாட்டுப்பற்று உடையவர்களை அடையாளம் காண வேண்டும். உங்களுடைய இந்தப் போராட்டத்தில் இந்திய நாடும், காங்கிரஸும் உங்கள் பக்கம் நிற்கும். ஜனநாயக முறைப்படி இந்த அரசினை நீங்கள் கீழிறக்க வேண்டும். உங்களது நோக்கம் உண்மையான நாட்டுப்பற்று உடையவர்களை அரசு அமைக்க வைப்பதாக இருக்க வேண்டும்” என்றார்.