பாகிஸ்தானின் சில பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வானிலை ஆய்வு மைய தகவலின்படி,
இன்று அதிகாலை 1.54-க்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்டிலிருந்து 44 கி.மீ தென்மேற்கே 50.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
பெஷாவர், இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளிலும், கைபர்-பக்துன்க்வா மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
கடந்த ஜூன் 17 அன்று நாட்டின் சில பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
2005ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.