நேஷனல் ஹெரால்டு முறைகேடு: சோனியாவுக்கு அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம்

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்கு வரும் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம்
நேஷனல் ஹெரால்டு முறைகேடு: சோனியாவுக்கு அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம்
Published on
Updated on
1 min read

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்கு வரும் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை கூடுதல் அவகாசம் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

‘கரோனாவுக்கு பிந்தைய உடல் பாதிப்புகளிலிருந்து முழுமையாக குணமடையும் வரை விசாரணையில் ஆஜராவதிலிருந்து சில வாரங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று சோனியா காந்தி விடுத்த கோரிக்கை அடிப்படையில், விசாரணையை 4 வார காலத்துக்கு அமலாக்கத் துறை ஒத்திவைத்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். அதுபோல, இந்த வழக்கில் கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருந்த சோனியா காந்திக்கு, திடீா் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய அழைப்பாணையை அவருக்கு அமலாக்கத் துறை அனுப்பியது.

இந்தச் சூழலில், கரேனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சில வாரங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். எனவே, விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா சாா்பில் புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டது.

‘அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து, ஜூலை கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு தேதியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாவை கேட்டுக்கொண்டுள்ளது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com