சமூக வலைத்தளத்தின் வழியாக காதலித்த பாகிஸ்தான் இளைஞரை சந்திக்க எல்லை தாண்டி செல்ல முயன்ற மத்தியப் பிரதேச இளம்பெண்ணை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபிசா கான். தனியார் பள்ளி ஆசிரியையான இவர் சமூக வலைத்தளத்தின் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த தில்ஷாத் என்பவரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக காணாமல் போன ஃபிசா கானை கண்டுபிடித்து தரக்கோரி அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகாரளித்தனர். உடனடியாக விசாரணையில் இறங்கிய காவலர்கள் ஃபிசா கான் ரேவாவில் பாஸ்போர்ட்டும், பாகிஸ்தான் செல்வதற்கான விசாவையும் பெற்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கவனத்திற்குரியவர் பட்டியலை (லுக் அவுட் நோட்டீஸ்) அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இருந்த ஃபிசா கான் எல்லையைக் கடக்கும்முன் தடுத்து நிறுத்தப்பட்டார். அமிர்தசரஸில் உள்ள நாரி நிகேதனில் பஞ்சாப் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் மத்தியப் பிரதேச காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்ட ஃபிசா கானை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். காதலனுக்காக நாடு விட்டு நாடு செல்ல எல்லை தாண்ட முயற்சித்த இளம்பெண்ணின் செயலைக் கண்டு பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.