நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 45 சதவிகிதம் கரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நேற்று 11,739 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திங்கள் கிழமையான இன்று 17,073 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பரவும் விகிதம் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் அரசு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 94,420 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 21 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,25,020ஆக உயர்ந்துள்ளது.