சில்லறை விற்பனை பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-ஆவது கூட்டம், சண்டீகரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இரு அமர்வுகளாக நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று, சில்லறை விற்பனை பொருள்களின் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படவுள்ளது.
ரூ.1000-க்கும் குறைவான உணவக அறை வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒப்புதல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.
சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எல்.இ.டி. விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பெயரில் அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருள்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.