உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையின் விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியிலும் அந்தந்த நாடுகள் களமிறங்கியுள்ளன.
அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனிலிருந்து ஏா் இந்தியா விமானங்கள் மூலமாக இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாயகம் திரும்பியுள்ளனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்திய சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்கின்றனர்.
ஏற்கெனவே, இந்தியர்களை மீட்கும் பணியான 'ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தில் ஏர் இந்தியாவுடன் நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானம் இணைந்த நிலையில், இந்திய விமானப்படையின் விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவாக அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நோக்கில் விமானப்படையின் சி-17 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.