உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது ராஜிநாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநரிடம் வழங்கினார்.
உத்தரகண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 இடங்களைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும், சுயேட்சை இரண்டு இடங்களிலும் வென்றுள்ளனர். தேர்தல் ஆணைய தரவுகளின்படி உத்தரகண்டில் பாஜக 44.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் இது கடந்த தேர்தலை விட குறைவு.
கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 46.5 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. அதேசமயம் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 37.9 சதவிகித வாக்குகளையும், மற்றவை 8.3 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 4.82 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெற்றாலும் கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திடம் தோல்வியடைந்தார்.
தாமியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 52 சதவிகித (44,479) வாக்குகளைப் பெற்றார். தாமி 37,425 வாக்குகளைப் பெற்றார். இந்த நிலையில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது ராஜிநாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநர் குர்மித் சிங்கிடம் இன்று வழங்கினார். இருப்பினும் புதிய அரசு பதவியேற்கும் வரை அவர் தற்காலிக முதல்வராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.