உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது.
பஞ்சாப், கோவா, மணிப்பூரில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் தற்போது, உத்தரகண்டிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
உத்தரகண்டில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜக மீண்டும் உத்தரகண்டில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும், சுயேட்சை இரண்டு இடங்களிலும் வென்றுள்ளனர்.
தேர்தல் ஆணைய தரவுகளின்படி உத்தரகண்டில் பாஜக 44.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 37.9 சதவிகித வாக்குகளையும், மற்றவை 8.3 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 4.82 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.