உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பாடல் ஒலிபரப்பியதற்காக மர்ம நபர்கள் ரகளையில் ஈடுபட்டு, திருமண வீட்டாரைத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமண ஊர்வலத்தில் ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள், 2 லட்ச ரூபாய் பணத்தையும் நகையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அவுர்ரியா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண ஊர்வலம் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் திருமண ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், யோகி ஆதித்ய நாத்தையும் புகழ்ந்து பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன.
அப்போது ஊர்வலத்தில் நுழைந்த மர்ம நபர்கள் பாடலை நிறுத்துமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், ஊர்வலத்தில் பங்கேற்ற வாகனங்களை அடித்து நொறுக்கி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து திருமண வீட்டைச் சேர்ந்த நபர் கூறியதாவது, நாங்கள் திருமண விழாவில் பங்கேற்றிருந்தோம். நான்கு கார், மூன்று வேன்களில் உறவினர்கள் சூழ திருமண ஊர்வலம் நடைபெற்றது. அதில் நரேதிர மோடி - ஆதித்ய நாத்தை புகழ்ந்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது நுழைந்த மர்ம நபர்கள் பாடலை நிறுத்தக்கோரி ரகளையில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி, கார் கண்ணாடிகளை உடைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் மணகனுக்கு அளிக்க வேண்டிய நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர் என்று கூறினார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.