
பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பதவியேற்க உள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதைத்ததொடர்ந்து பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். பகவந்த் மானுக்கு பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா்.
அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்பு ஒருநாள் கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இடைக்கால சபாநாயகர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையும் படிக்க- உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
இந்த நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. காலை 11 மணிக்கு பஞ்சாப் சிவில் செயலகத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பெறுப்பேற்க உள்ளனர். இதன் பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...