ஜெய்ப்பூர்: சுங்கக் கட்டண வசூல் குறித்த குறுந்தகவல் வந்ததைப் பார்த்துத்தான், தனது கார் திருடப்பட்டதையே ஒரு பெண் அறிந்திருக்கிறார் என்ற சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் மானசரோவர் காவல்நிலையத்தில் இது தொடர்பான புகார் ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.
இந்த புகாரில், அந்தப் பெண் கூறியிருப்பதாவது, சனிக்கிழமை இரவு தனது காரை ஒரு பூங்கா அருகே நிறுத்தியிருந்ததகாவும், ஞாயிறன்று 2.45 மணியளவில் அவரது செல்லிடப்பேசிக்கு, பாஸ்டாக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடிகளிலிருந்து தொடர்ச்சியாக குறுந்தகவல் வந்ததாகவும், அப்போதுதான் காரை நிறுத்தியிறுந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு காரைக் காணவில்லை என்று தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகார் பதிவாவதற்குள், அடுத்த சுங்கச்சாவடி வசூல் குறித்த குறுந்தகவலும் வந்துவிட்டது.
இது குறித்து திருடுப்போகும் வாகனங்களைக் கண்டுபிடிக்கும் தனிப்படையினர் அமைக்கப்பட்டு, கார் திருடு போன இடத்தில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.