புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றுக்குப் பலியானோர் எத்தனை பேர் என்பது குறித்த புள்ளிவிவரத்தை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்டிருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் தனது சுட்டுரையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தை மேற்கோள்காட்டி மத்திய அரசின் புள்ளிவிவரங்களை சாடியுள்ளார்.
அதாவது, நாட்டில் கரோனா தொற்றுக்கு இதுவரை 47 லட்சம் இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மத்திய அரசு சொல்வதுபோல 4.8 லட்சம் பேர் அல்ல.
அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் சொல்வார்.
கரோனா தொற்றுக்கு, தங்களது குடும்பத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு மரியாதை அளியுங்கள். அவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கி ஆதரவு அளியுங்கள் என்று கூறி, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புள்ளிவிவரத்தில், 2021ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலக்கட்டத்தில் உலகிலேயே இந்தியாவில்தான் கரோனாவுக்கு அதிக உயிர்பலி நேரிட்டுள்ளது. அதாவது 47 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்து ரஷியா, இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.