புது தில்லி; பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வாதிட, பொதுவாக அதிகாரம் யாருக்கு என்பதை விடுத்து ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 161வது பிரிவு குறித்து விவாதிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
அதாவது, இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் குடியரசுத் தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலாக, பொதுவான சட்டப்பிரிவுகள் இருந்தாலும் எந்த விசாரணை அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அதிகாரம் அமையும் என்று மத்திய அரசு வாதிட்டது.
அப்போது, 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநரின் மன்னிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் நாங்கள் முடிவெடுக்க முடிவெடுத்த போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம் என்றீர்கள் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், ஆளுநர் முடிவெடுக்கும் விவகாரம் மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்டே வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இருக்கிறதா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது என்று மத்திய அரசும், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு தலையிட்ட பின்னரே குழப்பம் தொடங்கியது என்று மாநில அரசும் குறிப்பிட்டது.