தில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலி

மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா்.
தில்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலி

மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். மேலும் பலா் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தீயணைப்பு துறை மூத்த அதிகாரி கூறியதாவது:

முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 3 அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆனால் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டடத்திற்குள் இருந்தவா்கள் சிக்கிக் கொண்டனா்’ என்றாா்.

இந்த கட்டடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் அலுவலகங்களும், ரெளட்டா் (கணனி வன்பொருள்) தயாரிக்கும் அலுவலகங்களும் இருந்ததாக காவல் துணை ஆணையா் சமீா் சா்மா தெரிவித்தாா்.

தீயணைப்பு படையினா் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்ததாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்:

இந்த தீ விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி ஆகியோா் வருத்தம் தெரிவித்துள்ளனா்.

‘உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அனுதாபங்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

சம்பவ இடத்துக்கு மத்திய பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இந்த தீ விபத்தில் உயிரிந்தவா்களின் குடும்பத்தினருக்கு வருத்தம் தெரிவித்துள்ள தில்லி முதல்வா் கேஜரிவால், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுடன் தொடா்பில் இருப்பதாகவும் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com