மக்களுடனான காங்கிரஸின் தொடர்பு உடைந்துவிட்டதாக அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
காங்கிரஸ் அடுத்து வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் சிறப்பாக செயல்பட கட்சி அமைப்பில் சீர்த்திருத்தங்கள் தேவை என்பதையுணர்ந்து ’நவ் சங்கல்ப்’ என்ற பெயரில் காங்கிரஸிக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்க உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்டு என்பதை வலியுறுத்தியுள்ளார். ஒரு குடும்பத்திலிருந்து கட்சிக்காக பணியாற்றமலே பல சீட்டுகள் இனி வழங்கப்படாது என்றார். ஒரு சீட்டு வழங்கப்பட உள்ள நபரும் கட்சிக்காக குறைந்தது 5 வருடங்களாவது அவர்களது அயராத உழைப்பினை நல்கியிருக்க வேண்டும்.
மக்களுக்கும், காங்கிரஸிக்கும் இடையேயான தொடர்பு உடைந்து விட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும். நாம் மீண்டும் மக்களை சந்திக்க செல்ல வேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும். காங்கிரஸிக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்த காங்கிரஸ் வருகிற அக்டோபர் மாதம் மக்களை சந்திக்க யாத்திரை செல்லவுள்ளது எனவும் தெரிவித்தார்.