புது தில்லி: 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை கையிருப்பு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்று மிகவும் குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது கடந்த 13 ஆண்டுகளில் கோதுமை கையிருப்பு மிகவும் குறைவாக இருந்த இரண்டாவது ஆண்டாகவும் கடந்த 15 ஆண்டுகளில் மத்திய அரசு மிகக் குறைவாக கோதுமை கொள்முதல் செய்யும் ஆண்டாகவும் உள்ளது.
உணவுப் பொருள் இருப்பை உறுதி செய்யும் வகையில், கோதுமை பற்றாக்குறை காரணமாக, மே 13ஆம் தேதி வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்திருந்தது.
பொது வழங்கல் துறையின் மூலம் ஏழை மக்களுக்கு கோதுமை வழங்குவதற்குத் தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது என்று மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதல், கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் வாட்டி வந்ததால், கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்துக் குறைந்துள்ளது. எனவே, வரத்துக் குறைந்திருப்பதால், பொது வழங்கல் துறையின் மூலம் கோதுமை விநியோகத்தை சீராக வைத்திருக்க ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.