உலகின் சில நாடுகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதால் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் 28 படுக்கை வசதி கொண்ட தனி மருத்துவப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை மும்பை நகரில் ஒருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனை மும்பை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த குரங்கு அம்மை தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் கூறியிருப்பதாவது, ” இந்த நோயானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவக்கூடியது. இந்த குரங்கு அம்மை பரவும் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த நோய் குறித்து அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கஸ்தூர்பா மருத்துவமனையில் 28 படுக்கை வசதிகள் கொண்ட தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை அறிகுறிகளாக காய்ச்சல்,சிகப்பு புள்ளிகள் மற்றும் வீக்கம் போன்றன உடலில் ஏற்படும் மாற்றங்கள். இந்த அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பின் இறப்பு நேரிடவும் வாய்ப்புள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தும், நோய் பாதிப்பு ஏற்பட்ட நபரிடமிருந்து மற்ற நபர்களுக்கும் பரவுகிறது. உடலில் ஏற்படும் காயங்கள், வாய், மூக்கு ஆகியவை வழியாக எளிதில் உடலினுள் சென்று விடுகின்றன. அதேபோல மனிதனின் உடல் திரவங்களிலிருந்தும் இந்த குரங்கு அம்மை நோய் பரவுதாக கூறப்பட்டுள்ளது.