பஞ்சாபி பாடகரான சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) அடையாளம் தெரியாத நபா்களால் மான்சா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
பஞ்சாப் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் உள்பட 424 பேரின் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு சனிக்கிழமை அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஆளும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சித்து மூஸேவாலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காங்கிரஸ் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு மருத்துவமனையிலிருந்து குருத்வாரா சாஹிப் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதாக அமரீந்தர் ராஜா தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் பிரபல பாடகராக இருந்தவா் சித்து மூஸேவாலா. இவா் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.