அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சிந்து மூஸேவாலாவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
பஞ்சாபின் மானசா மாவட்டத்திலுள்ள மூசா கிராமத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
உயிரிழந்த சித்துவின் தந்தை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆகியவற்றை கோரி இருந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் பிரபல பாடகராக இருந்தவா் சித்து மூஸேவாலா. இவா் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனிடையே மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில காவல் துறை திரும்பப் பெற்றது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மான்சா மாவட்டத்தில் சித்து மூஸேவாலாவை அடையாளம் தெரியாத நபா்கள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனா்.
இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான குழு சித்து மூஸேவாலா கொலைக்கு பொறுப்பேற்றுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய், தீவிர மாணவ அரசியலில் ஈடுபட்டவர். பல்வேறு குற்றச்செயல்களை செய்து வந்ததாக அவர் மீது வழக்குகளும் உள்ளன. தற்போது அவர் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.