மும்பையில் புதிய சிறைச்சாலை மற்றும் ஏழு காவல் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாகத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பதிவில்,
மாநிலத் தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புணே ஆகிய இடங்களில் புதிய சிறைச்சாலைகளின் தேவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் செவ்வாயன்று கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஆர்தர் சாலையில் ஒரே ஒரு சிறைச்சாலை மட்டுமே உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் சிறந்த தரமான வேலை எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார்.
மேலும், காவலர் குடியிருப்புகளுக்கு அரசிடம் இருந்து நிதிப் பற்றாக்குறை ஏற்படாது என உறுதி அளித்தார். மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள காவலர் குடியிருப்புகளை மறுசீரமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
15 புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டன, ஆறு மாதங்களில் மேலும் 10 காவல் நிலையங்கள் தயாராகிவிடும். மகாராஷ்டிரா முழுவதும் 457 காவலர் குடியிருப்பு, 53,860 காவலர்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் 87 புதிய காவல் நிலையங்களும், மும்பையில் 7 காவல் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவசரமாகத் தேவைப்படும் திட்டங்களை முதலில் எடுத்து விரைந்து முடித்து, பின்னர் கட்டம் வாரியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாத்தியமான இடங்களில், காவல் நிலையத்திற்கு அருகிலேயே காவலர் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.