லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில அரசு, அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, பள்ளி ஆசிரியர்கள், அனைவரும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக பள்ளியில் இருக்க வேண்டும் என்றும், பள்ளியில் இருந்து மாணவர்கள் கிளம்பி 30 நிமிடங்களுக்குப் பிறகே ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து கிளம்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யும் வகையிலும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
அடுத்த நாள் வகுப்பில் என்ன பாடம் நடத்தப் போகிறீர்கள் என்பது தொடர்பான தகவல்களை ஆசிரியர்கள் முந்தைய நாளே தயாரிக்க வேண்டும் என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வத் தரத்தை உயர்த்த உதவும் என்றும் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.