சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதையில் இருந்த மருத்துவர் ஒருவர், பெண் நோயாளியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கெர்வானி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் குமார், நேற்று(புதனகிழமை) நள்ளிரவு தனது தாய் சுக்மதியின் உடல்நிலை மோசமானதை அடுத்து, ஆம்புலன்ஸுக்காக அவசர உதவி எண்களை அழைத்தார். ஆனால், ஆம்புலன்ஸ் வர நேரமாவதை அறிந்த அவர், உடனடியாக ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் தாயை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையின் இடையே மருத்துவர், சுக்மதியை அடித்ததாக மகன் ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது மருத்துவர் போதையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்த விடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து கோர்பா மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அவினாஷ் மெஷ்ராம், இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்ததையடுத்து மருத்துவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.