டெங்கு பரவலைத் தடுக்க மாவட்டத்தில் குறைந்தது ஒரு மருத்துவமனையாவது டெங்கு பரவலை தடுப்பதற்காகவே மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட வேண்டுமென உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
கொசுக்கடியினால் பரவக் கூடிய டெங்கு நோயானது உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னௌவில் அதிகரித்து வருகிறது. அண்மையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னௌவில் பரவி வரும் டெங்கு நோய் குறித்தும், நோயினைத் தடுப்பதற்கு உத்தரப் பிரதேச மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் கேள்வி எழுப்பியது. அதில், அரசு எடுக்கும் நடவடிக்கைகளை செய்தித் தாள்களில் மட்டுமே காண முடிகிறது எனவும், கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த சூழலில் இன்று ( நவம்பர் 12) உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் முக்கியக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க: மெல்போர்னில் புதிய சாதனை படைக்குமா இங்கிலாந்து?
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது: கடந்த சில வாரங்களாக டெங்குவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு விரைந்து செயல்பட்டு டெங்குப் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் வீடுகள்தோறும் சென்று மக்களுக்கு டெங்குப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கரோனாவுக்கென தனியாக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தியது போலவே டெங்குவால் பாதிக்கப்படுபவர்களை குணப்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் குறைந்தது ஒரு மருத்துவமனையாவது உருவாக்கப்பட வேண்டும். அந்த மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். மருத்துவமனைக்கு வரும் ஒவ்வோரு நோயாளிக்கும் தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களிடத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.