அருணாசலில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ. 50 ஆயிரம் கோடி செலவிட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அருணாசலில் டோன்யி போலோ விமான நிலையத்தினை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத்தினையும் அவர் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அருணாசலின் இயற்கை அழகு மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. அருணாசலில் உள்ள 85 சதவிகித கிராமங்கள் பிரதம மந்திரியின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலை வசதிகளைப் பெற்றுள்ளது. தொலைதூர பகுதிகளை இணைப்பதற்காக நெடுஞ்சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வருங்காலத்தில் அருணாசலின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இன்று திறக்கப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்தின் மூலம் பல்வேறு வாய்ப்புகள் உருவாக உள்ளன.
இந்த விமான சேவையின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மற்ற பகுதிகளுக்கு அனுப்பலாம். அருணாசலில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். எல்லைப் பகுதிகளை ஒட்டிய கிராமங்களுக்கு எல்லையோர கிராமங்களுக்கான திட்டம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் மூலம் மக்கள் எல்லைப்புற கிராமங்களில் இருந்து இடம் பெயர்தல் என்பது குறையும்.
இதையும் படிக்க: காசியைப் போன்று தமிழ்நாடும் பழமையும், பெருமையும் வாய்ந்தது: மோடி
மூங்கில் தாவரங்களை வெட்டுதவற்கு காலனியாதிக்க காலத்தில் அருணாசல் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை நீக்குவதற்கான முயற்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மூங்கில்கள் அருணாசல் மக்களின் வாழ்க்கைமுறையில் ஒன்றாக கலந்துள்ளது. அரசின் இந்த முயற்சியின் மூலம் அருணாசல் மக்கள் மூங்கில் வளர்க்கலாம். உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். ஏழை மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.