என்ன நான் ஜோதிடரை சந்தித்தேனா, வருங்காலத்தை மாற்றும் சக்தி எனது மணிக்கட்டுக்கு இருக்கிறது, உள்ளங்கையை யாருக்கும் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.
தனது எதிர்காலம் பற்றி நிலையற்ற தன்மை நிலவுவதால், அனைத்துப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, ஏக்நாத் ஷிண்டே ஜோதிடரைப் பார்க்கச் சென்றுவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
இதற்கு பதிலளித்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே, எந்த ஜோதிடரிடமும் சென்று எனது உள்ளங்கையை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உள்ளங்கை ரேகைகளை மாற்றக் கூடிய சக்தி மணிக்கட்டில் இருக்கும் போது, அதற்கான சக்தியை பாலா சாஹேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திக்கே அளிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
ஷிண்டே, கடந்த புதன்கிழமை, இஷானேஷ்வர் மகாதேவ் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஷிண்டேவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பதும், அவ்வப்போது ஜோதிடர்களைச் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் என்பதால், அவர் தனது எதிர்காலம் பற்றி அறிய ஜோதிடரைச் சந்திக்கச் சென்றதாக எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.