சந்திராபூர்: மகாராஷ்டிரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள பல்ஹாா்ஷா ரயில்வே நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தின் பலகைகள் இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரம் மாநிலம், சந்திராபூர் மாவட்டம் பல்ஹாா்ஷா சந்திப்பு ரயில் நிலையத்தில் புணே செல்லும் ரயிலில் ஏறுவதற்காக நடை மேம்பாலத்தில் அதிகமானோர் சென்றனர். அப்போது எதிா்பாராதவிதமாக நடை மேம்பாலத்தின் தரைப் பகுதியின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணியளவில் இடிந்து விழுந்தது.
இதில், மேம்பாலத்தில் இருந்தவர்கள் கீழே இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களில் பலத்த காயமடைந்த 4 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஊரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக ரயில்கள் எதுவும் வராததால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை.
நிவாரணம் அறிவிப்பு: இந்நிலையில், நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 ஆம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.