தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 412 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகரில் டெங்கு காய்ச்சலால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகரில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மாதத்தின் நான்காவது வாரம் வரை 525 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு இருந்தது.
ஆனால், தற்போது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 412 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெங்குவால் 693 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது தலைநகரான தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது. எனினும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும், டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.