உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் தமி தெரிவித்துள்ளார்.
கர்வால் இமயமலையின் கங்கோத்ரி மலைத்தொடர் திரௌபதி தண்டா-2 உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரு மலையேறும் நிறுவனத்தை சேர்ந்த 29 பேர் இன்று பனிச்சரிவில் சிக்கினர்.
இவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக இந்திய விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இதுவரை 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீரர்களை மீட்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தரப்பில் செய்து தரப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.