ராஜஸ்தானில் தொழில்துறை முதலீடு மேற்கொள்வதற்கு அதானியோ, அம்பானியோ அல்லது அமித்ஷாவின் மகனோ யாராக இருந்தாலும் வரவேற்கிறோம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்முதலீட்டு மாநாட்டில் பிரபல தொழிலதிபர் அதானி கலந்து கொண்டார். ராஜஸ்தான் முதல்வருடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட அவர் மாநிலத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | காங்கிரஸில் என்னை யாரும் இயக்க முடியாது: மல்லிகார்ஜுன கார்கே
தொடர்ந்து அதானி குழுமத்துடன் மாநில அரசு ரூ.35,000 மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதானியின் தொழில் வளர்ச்சிக்கு பாஜக துணைபோவதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வரின் செயல் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.தொழில் முதலீடுகளை ஏற்படுத்த அதானியோ, அம்பானியோ அல்லது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவோ யாராக இருந்தாலும் வரவேற்க தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | நாகை சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை
இந்த மாநாட்டின் மூலம் 11 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 3 லட்சத்து 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.