நாகை சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை

நாகை சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சிறையில் தற்கொலை செய்து கொண்ட செந்தில்.
சிறையில் தற்கொலை செய்து கொண்ட செந்தில்.
Published on
Updated on
1 min read

நாகை சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி தமிழ்மணி(40). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் மகன்களைப் பிரிந்து கீழவாடியில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.  இதனிடையே,  கொள்ளிடம் (ஆணைக்காரன்சத்திரம்) பாலூரான்படுகை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(30) என்பவருக்கும், தமிழ்மணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக செந்தில் வீட்டில் தங்கி தமிழ்மணி அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்மணியின் நடத்தையில் சந்தேகமடைந்த செந்தில், கடந்த 21-ஆம் தேதி இரவு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், தமிழ்மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தமிழ்மணியின் சடலத்தை வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் பக்கவாட்டில் மறைத்து வைத்த செந்தில், வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார்.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் சென்ற போலீஸார் தமிழ்மணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, தப்பியோடி தலைமறைவான செந்திலை செப். 22-ஆம் தேதி போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் செப். 23-ஆம் தேதி நாகை சிறையில் அடைக்கப்பட்டார். 

நாகை சிறையில் இருந்த அவர், சனிக்கிழமை பிற்பகல் தனது அறையில் இருந்து வெளியே வந்து கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக கைதிகள், கழிப்பறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, கழிப்பறை ஜன்னல் கம்பியில் தனது கைலியைக் கொண்டு செந்தில் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது. சிறை காவலர்கள் விரைந்து சென்று, அவரை தூக்கிலிருந்து விடுவித்து நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில் ஏற்கெனவே இறந்து விட்டதாக உறுதி செய்தனர். இதையடுத்து, அவரது சடலம் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com