காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தங்களது குடும்பத்தின் கைப்பாவையாக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு-காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பயணம் செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து கர்நாடகத்தில் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிக்க | நல்ல 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க இரண்டு மடங்கு செலவாகுமோ?
இந்நிலையில் நடைபயணத்தின் மத்தியில் செய்தியாளர்களுடம் பேசிய ராகுல்காந்தி, “பாரத ஒற்றுமை நடைபயணத்தில் நான் தனியாக இல்லை. சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் என்னுடன் உள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு இருவர் போட்டியிடுகின்றனர். அவர்களில் யார் வெற்றி பெற்றாலும் எங்களது குடும்பத்தின் கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள். அவர்கள் கைப்பாவையாக செயல்படுவார்கள் என்று தெரிவிப்பதே அவர்களை இழிவுபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | எதற்காக இந்திய ஒற்றுமை நடைப்பயணம்? மனம்திறந்தார் ராகுல் காந்தி
“2024 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளவில்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் மேற்கொள்ளும் பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக மக்களை ஒற்றுமைப்படுத்தவே இந்த நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறேன்” என ராகுல்காந்தி விளக்கமளித்தார்.