தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு முறை டிக்கெட் எடுத்தால் அதனைப் பயன்படுத்தி 5 முறை பயணிக்கலாம் என மும்பை போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
எண்ம (டிஜிட்டல்) பயணச் சீட்டுகள் பயன்பாட்டிற்கொ கொண்டுவருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக பிர்ஹான் மும்பை மின்சார மற்றும் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள பேருந்துகளில் தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒரு வாரத்திற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சலோ செயலி மூலம் முதல்முறை எண்ம டிக்கெட் எடுப்பவர்கள் அந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி 5 முறை பேருந்துகளில் பயணித்துக்கொள்ளலாம். இந்த டிக்கெட்டின் விலை ரூ.9 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டை வைத்து 7 நாள்களுக்கு எந்த வழித்தடத்தில் வேண்டுமானாலும் பயணித்துக்கொள்ளலாம் என பிர்ஹான் மும்பை மின்சார மற்றும் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை பேருந்துகளில் எண்ம பயணச்சீட்டு பயன்பாட்டை மக்களிடையே பரவலாக கொண்டுசேர்க்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அனைத்து வகையான சொகுசு மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.