மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிமகுடமா, முள்கிரீடமா?

 அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, சோனியா காந்தி குடும்பத்தின் ஆசிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே நிச்சயம் தலைவராக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிமகுடமா, முள்கிரீடமா?

 அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, சோனியா காந்தி குடும்பத்தின் ஆசிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே நிச்சயம் தலைவராக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் நிலையில், கார்கேவுக்கு இப்பதவி மணிமகுடமாக இருக்குமா அல்லது முள்கிரீடமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
 2019-இல் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி துறந்த பிறகு, கரோனா காலகட்டம் காரணமாக அப்பதவிக்கான தேர்தல் நடக்கவில்லை.
 இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வந்த நிலையில், இப்போது அக்.17-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
 இந்தப் பதவிக்கு ராகுல் காந்திக்கு எதிரான ஜி23 தலைவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சசி தரூர், சோனியா காந்தி குடும்ப ஆசி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. முன்னதாக, தேசிய ஒற்றுமை நடைப்பயண தொடக்க விழாவில் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்தான் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி குடும்பத்தால் முன்மொழியப்படக்கூடும் என்ற யூகம் இருந்தது. இந்நிலையில், அசோக் கெலாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கினால், தான் ஏற்கெனவே உறுதி அளித்ததுபோல இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவியை வழங்கலாம் என்றும் ராகுல் காந்தி கணக்குப் போட்டார்.
 ஆனால், தனது பெயர் வேட்பாளராக அரசல் புரசலாக அடிபடும்போதே, காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பது நியமனப் பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தேசியத் தலைவர் பதவியானது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் அது தனக்குப் பொருந்தாது என்றும் கருத்து தெரிவித்தார் கெலாட். தனது முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில்தான் இவ்வாறு கெலாட் இலைமறை காயாக தன் கருத்தை வெளிப்படுத்தினார்.
 இத்துடன், தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 90 பேரை சச்சின் பைலட்டுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்து சோனியா காந்தி குடும்பத்துடன் நேரடியாக அதிகார அரசியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் தலைவர் பதவியைவிட, ராஜஸ்தான் முதல்வர் பதவியே அதிகாரமிக்கது என்பதையும் கெலாட்டின் நடவடிக்கை உணர்த்தியது.
 பதவிக்கு வரும் முன்பே அதிகார அரசியலில் ஈடுபடும் கெலாட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களது குடும்பத்தைவிட்டு கைநழுவி போகக்கூடும் என உணர்ந்த சோனியா காந்தி குடும்பத்தினர், தங்களது விருப்பத்துக்கு ஏற்ப அசைந்தாடும் பொம்மை போன்ற தலைவரை தேர்வு செய்ய ஆர்வம் காட்டினர். அதன்பிறகு மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக் ஆகிய மூவரில் ஒருவருக்கு சோனியா காந்தி குடும்ப ஆசி கிடைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது.
 திக்விஜய் சிங் போட்டியிட்டால் மும்முனைப் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவரும் ஒதுங்கிக் கொண்டார். எனவே, கார்கே மட்டுமே சோனியா காந்தியின் ஆசி பெற்ற வேட்பாளராக இப்போது களத்தில் உள்ளார். இதற்கிடையே கடைசி நேர திருப்பமாக ஜார்க்கண்டை சேர்ந்த கே.என்.திரிபாதியும் வேட்புமனுவை தாக்கல் செய்தாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் மல்லிகார்ஜுன கார்கே-சசிதரூர் இடையே மட்டுமே இப்போது நேரடிப் போட்டி நிலவுகிறது.
 இதில் சுவாரசியம் என்னவெனில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம், சசி தரூருக்கு ஆதரவாக வேட்புமனுவில் கையொப்பமிட்டிருந்தார். அதேநேரத்தில் ராகுல் காந்திக்கு எதிரான ஜி23 குழுவை சேர்ந்த தீபேந்திர சிங் ஹூடா போன்றவர்கள் கார்கேவுக்கு ஆதரவாக வேட்புமனுவில் கையொப்பமிட்டிருந்தனர்.
 இதுவரை பட்டாபி சீதாராமய்யா, புருஷோத்தம் தாஸ் தாண்டன், யு.என்.தெபர், நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜர், நிஜலிங்கப்பா, ஜெகஜீவன் ராம், சங்கர் தயாள் சர்மா, தேவகாந்த் பரூவா, பி.வி.நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி ஆகியோர் நேரு-காந்தி குடும்பத்துக்கு வெளியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளனர்.
 இவர்களில் காமராஜர், நரசிம்ம ராவ் ஆகிய இருவரும் நேரு-சோனியா காந்தி குடும்பப் பிடியில் இல்லாமல் மிகுந்த அதிகாரத்துடன் இப்பதவியை வகித்தனர். இக்குடும்பப் பிடியில் இல்லாத சூழலிலும் சீதாராம் கேசரியால் கட்சியில் முழு அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை.
 இதுவரை நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலைப் பார்க்கும்போது, நேரு-படேல் காலகட்டத்தில் படேலுக்கு கட்சி கட்டமைப்புக்குள் அதிக செல்வாக்கு இருந்ததால் படேல் ஆதரவு பெற்ற வேட்பாளர் புருஷோத்தம் தாஸ் தாண்டன், நேரு ஆதரவு வேட்பாளர் ஜே.பி.கிருபளானியை 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
 காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காமராஜர் போட்டியிட்டதால் மொரார்ஜி தேசாய் போட்டியிடவில்லை. இதனால் போட்டியின்றி காமராஜர் தேர்வானார். 1992-இல் நரசிம்ம ராவ் போட்டியின்றி தேர்வானார். 1996-ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் பதவி விலகிய பிறகு அவரது ஆதரவாளர் சீதாராம் கேசரி வெற்றி பெற்றார். சீதாராம் கேசரிக்கு எதிராக சரத் பவார், ராஜேஷ் பைலட் ஆகிய இருவர் போட்டியிட்டனர். இதில் சரத்பவார் 882 வாக்குகளையும், ராஜேஷ் பைலட் 354 வாக்குகளையும் பெற்றனர். கேசரி 6,224 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 பிறகு 1999-இல் சோனியா காந்தியும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திர பிரசாதாவும் மோதினர். சோனியா காந்திக்கு 7,448 வாக்குகளும், ஜிதேந்திர பிரசாதாவுக்கு 94 வாக்குகளும் கிடைத்தன. இந்நிலையில், நேரு-சோனியா காந்தி குடும்பத்துக்கு வெளியில் இருந்து இப்போது கார்கே இப்பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்தக் குடும்ப ஆசி இருப்பதால் அவர் வெற்றி பெறுவது உறுதி.
 கார்கே வெற்றி பெற்றாலும் அவர் சுதந்திரமாகச் செயல்பட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. காங்கிரûஸ பொருத்தவரை நேரு-சோனியா காந்தி குடும்பமே கட்சியை தேசிய அளவில் ஒருங்கிணைக்கக்கூடிய சக்தியாக திகழ்கிறது. அவர்களைத் தவிர யார் பொறுப்பேற்றாலும் அவர்களுக்கு பிற நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
 கார்கேவின் பின்னணி காங்கிரஸýக்கு உதவுமா என்பதை ஆய்வு செய்து பார்த்தால், அவர் தலித் வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள தலித் மக்கள் மத்தியில் காங்கிரஸýக்கு நல்லெண்ணத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. கார்கேவின் நியமனம் கர்நாடக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு தலித் வாக்குகள் காங்கிரûஸ நோக்கி திரும்ப இது உதவும். ஆனால், அதேவேளை அவர் தென்மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேசிய அளவில், குறிப்பாக வடஇந்தியாவில் அது காங்கிரஸýக்கு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறி.
 வழக்கமாக, காங்கிரஸ்-பாஜக சுமார் 190 தொகுதிகளில் நேருக்கு நேராக களத்தில் மோதுகின்றன. இதில் 90 சதவீத தொகுதிகள் வடஇந்தியாவில்தான் உள்ளன. இவற்றில் 180 தொகுதிகளுக்கு மேல் 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனால்தான் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் இருமுறை ஆட்சியில் அமர்ந்துள்ளது.
 இந்நிலையில், பாஜகவுடன் நேரடியாக மோதும் தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கான காங்கிரஸின் செல்வாக்கை தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரால் எப்படி உயர்த்த முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே பாஜகதான் நாட்டில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார்கேவின் தேர்வு காங்கிரûஸ தென்னிந்திய கட்சியாக சுருக்கும் வாய்ப்பும் உள்ளது.
 கார்கேவின் தேர்வு, கர்நாடகம், தமிழகம், கேரளம், தெலங்கானா ஆகியற்றில் காங்கிரஸýக்கு ஓரளவு கைகொடுக்கலாம். ஆனால், தென்னிந்தியாவில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நேரடியாக பிரசாரம் செய்தால் காங்கிரஸýக்கு பலம் தானாக அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில், ஏற்கெனவே காங்கிரஸ் பலம் குறைந்த, அதுவும் பாஜகவுடன் நேரடியாக மோதி வெற்றி பெற வேண்டிய வட இந்தியாவில் இருந்து ஒருவரை தலைவராக தேர்வு செய்திருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
 அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வெகு விரைவில் பொறுப்பேற்க இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, காமராஜர் போல அதிகாரமிக்க தலைவராகச் செயல்படுவாரா அல்லது சீதாராம் கேசரி போல அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாத சூழலில் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com