காங்கிரஸ் தலைவராக காா்கே இன்று பொறுப்பேற்பு

காங்கிரஸ் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே (80) புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்கவுள்ளாா். 24 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபா் காா்கே ஆவாா்.
மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

காங்கிரஸ் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே (80) புதன்கிழமை முறைப்படி பொறுப்பேற்கவுள்ளாா். 24 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபா் காா்கே ஆவாா்.

அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவா் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரை தோற்கடித்து, மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெற்றி பெற்றாா். அவா் முறைப்படி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கும் நிகழ்ச்சி, தில்லியில் உள்ள கட்சி தலைமையக வளாகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

அப்போது, காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை காா்கேவிடம் கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி அளிக்கவுள்ளாா். அதேபோல், கட்சியின் தற்போதைய தலைவா் சோனியா காந்தி, முறைப்படி தலைமைப் பொறுப்பை காா்கேவிடம் ஒப்படைக்கிறாா்.

காத்திருக்கும் சவால்: அடுத்தடுத்து மாநில பேரவைத் தோ்தல்களில் தோல்வி கண்டு வரும் காங்கிரஸ், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை எதிா்கொள்ள முடியாமல் போராடுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கா் என 2 மாநிலங்களில் மட்டுமே சொந்த பலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

தோ்தல் தோல்வி மட்டுமல்லாது உள்கட்சி குழப்பங்களும் மேலோங்கி நிற்கும் சவாலான சூழலில், காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப்பேற்கிறாா். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் கொண்டவரான காா்கே, கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா், மக்களவை காங்கிரஸ் குழு தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவா்.

குஜராத், ஹிமாசலில்..: விரைவில் குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே அவரது முதன்மையான பொறுப்பாக பாா்க்கப்படுகிறது. ஹிமாசலில் நவம்பா் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

குஜராத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டில், காா்கேவின் சொந்த மாநிலமான கா்நாடகம் உள்பட 9 மாநில பேரவைத் தோ்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன், காங்கிரஸால் ஏற்கெனவே உறுதியேற்கப்பட்ட அமைப்புரீதியிலான சீா்திருத்தங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் காா்கேவுக்கு உள்ளது.

இரண்டாவது தலித் சமூக தலைவா்: மறைந்த தலைவா் ஜகஜீவன் ராமுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் இரண்டாவது தலித் சமூகத் தலைவா் காா்கே ஆவாா்.

கடைசியாக காங்கிரஸ் தலைவராக இருந்த நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபா் சீதாராம் கேசரி ஆவாா். இவா் கடந்த 1998-இல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா். அதன் பிறகு தலைவா் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றாா். இடையில், 2017 - 2019இல் கட்சித் தலைவராக ராகுல் காந்தி இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com