ஜம்மு: ஜம்மு ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த வாடகைக் கார்கள் நிறுத்துமிடத்துக்கு அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையில் இரண்டு பெட்டிகளில் வெடிபொருள்களை ரயில்வே காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
வாடகைக் கார்கள் நிறுத்துமிடத்துக்கு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் கேட்பாரற்றுக் கிடந்த பை குறித்து தகவல் கிடைத்தது. அந்த பையில் இரண்டு பெட்டிகள் இருந்தன. அதில் வெடிபொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 18 டெடோனேட்டர்கள், மெழுகு போன்ற ஒரு பொருள் 500 கிராம் எடையுடன் இருந்தது. சில மின்சார ஒயர்களும் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சம்பா மாவட்டத்தில் சில பயங்கரவாதக் குழுவினர் நடமாட்டம் இருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை காவல்துறையினர் கிழித்தெறிந்த நிலையில், ஜம்மு ரயில் நிலையம் அருகே வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.