பேஸ்புக்கில் (முகநூல்) கடந்த ஜூலை மாதம் ஆட்சேபத்துக்குரிய வகையில் வெளியான 2.7 கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் தங்களுக்கென பயனர்களைக் கொண்டுள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்களை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் மாதந்திர அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் விதிகளை மீறி பதிவு செய்யப்பட்டதாக 2.7 கோடி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சா்ச்சையான காளி போஸ்டா்: லீனா மணிமேகலைக்கு மீண்டும் சம்மன்
அதில் பேஸ்புக்கில் 2.5 கோடி பதிவுகளும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 20 லட்சம் பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆபாசத்தை தூண்டும் விதமான 27 லட்சம் பதிவுகளும், வன்முறையை ஏற்படுத்தும் விதமான 23 லட்சம் பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | கேரளம்: ஆளுநர் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்
பேஸ்புக் பயனர்களிடமிருந்து 626 புகார்களும், இன்ஸ்டாகிராம் பயனர்களிடமிருந்து 1033 புகார்களும் பெறப்பட்டு அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.