கொச்சி: இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாகக் கருகிறார்கள். தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ திருமணத்தையே தவிர்க்கிறார்கள் என்று கேரள உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், நுகர்வோரின் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கலாசாரமும் திருமண உறவுகளில் கொண்டு வரப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. திருமண நாளை மறந்துபோகும் கணவர்களுக்கான செய்தி
38 வயதாகும் மனைவியிடமிருந்து விவாகரத்துக் கேட்டு 34 வயது நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். தற்போது ஆணுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு மனைவியை துன்புறுத்தி வரும் கணவர், விவாகரத்துக் கேட்டும், கீழமை நீதிமன்றங்கள் விவாகரத்து மனுவை நிராகரித்துவிட்டன.
உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த கணவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய காலக்கட்டத்தில், இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாக பார்க்கிறார்கள். எந்த இடையூறும் இல்லாமல் வாழ திருமணத்தை தவிர்க்கிறார்கள். மனைவி என்ற வார்த்தையை கவலையை அழைத்து வருபவர் என வர்ணிக்கிறார்கள். நுகர்வோரின் பழக்கமான பயன்படுத்தி தூக்கியெறியும் கலாசாரத்தையும் இதில் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஒன்றாக சேர்ந்து வாழும் நடைமுறை அதிகரித்து, பிடிக்கவில்லையென்றால் குட் பாய் சொல்லி பிரிந்துவிடுகிறார்கள் என்று தங்களது கருத்தை வெளியிட்டனர்.
முன்பெல்லாம் கேரளத்தின் குடும்பங்களை நன்கு பிணையப்பட்ட உறவுகள் கொண்ட குடும்பங்களைப் பற்றி கூறுவார்கள். ஆனால், சுயநலத்துக்காக தற்போது திருமண பந்தங்களை உடைத்து, தங்களது குழந்தைகளைப்பற்றி எந்த அக்கறையும் கொள்ளாத தலைமுறையாக உருவாகி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.